Price: ₹ 64.00
(as of Nov 12,2020 07:01:22 UTC – Details)
ஆதாம் கதையின் ஒரு பகுதி !
பூமியின் ஆடையாய்
மூடுபனி மட்டுமே
முளைத்திருந்தது அப்போது.
இன்னும்
மழை தன்
முதல் பிரசவத்தை
நடத்தவில்லை.
தன் முதல் மனிதனுக்கு
ஆண்டவர்
ஆதாம் என்று பெயரிட்டார்.
ஏதேனில் அத்தனை
ஏற்றங்களையும் அவனுக்காய்
ஏற்படுத்தி,
ஒரு மரத்தை மட்டும்
தடை விதித்தார்.
அதை உண்டால்
நீ
சாகவே சாவாய் என்று
முதல் எச்சரிக்கையை
விடுத்தார்.
அதுவே
மனுக்குலத்தின் மீது
விடுக்கப் பட்ட
முதல் எச்சரிக்கை.
அதுவே
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட
முதல் பணி.
அதுவே
நகர்த்தி வைக்கப்பட்ட
முதல் நம்பிக்கை.
விலங்குகள்
பறவைகள் அனைத்துக்கும்
ஆதாம்
இட்ட பெயரே
சொந்தப் பெயராயிற்று.
அப்படி,
அத்தனை உயிர்களுக்கும்
ஆதாம்
முதல் தந்தையானான்.
ஆனால்,
தனக்குச் சரியான
துணை ஒன்றும் அவனுக்கு
தட்டுப் படவில்லை.
தன் சாயலை
எந்த பறவையும்,
எந்த விலங்கும்
சார்ந்திருக்கவில்லை.
கடவுள்,
அவனுக்கோர்
துணை செய்யத் திட்டமிட்டார்.
அவன் கண்களின் கீழ்
ஆழ் உறக்கம்
ஒன்று
தோன்றச் செய்து,
பின்
அவன் விலா எலும்பொன்றை
உருவி அதை
பெண்ணாய் படைத்து
துணையாய் தந்தார்.
ஆணிலிருந்து
பிறந்ததால் அவள்,
பெண் எனப் பட்டாள்.
ஆண்டவர் அவளை
ஆதாமுக்கு
துணையாய் அளித்தார்.
காலெலும்பை எடுத்தோ,
தோளெலும்போ எடுத்து
பெண்ணைப் படைக்காமல்,
இருவரும்
சமமாய் இருக்கக் கருதி
விலா எலும்பை தேர்ந்தெடுத்தார்
கடவுள்.
இருவருமே
நிர்வாணத்தை அணிந்திருந்தனர்
ஆனால்
அவர்கள்
வெட்கத்தை அறிந்திருக்கவில்லை.
சூழ்ச்சிக்கார பாம்பெனும்
சாத்தான்
ஓர் நாள் பெண்ணைச் சந்தித்தது.
விலக்கப்பட்ட மரத்தின்
கனியைத் தின் என்று
விஷ ஆலோசனை அளித்தது.
பெண்ணோ,
அது விலக்கப்பட்ட கனி
தொடுதல் தகாது என்றாள்.
பாம்போ,
நீ ஏதும் அறியாதவள்,
அது
சுவைகளின் சிகரம்,
அழகின் ஆதாரம்.
அக்கனி தீக்கனி அல்ல
அதை உண்டால்
நீ
கடவுளைப் போல் ஆவாய்.
ஏமாந்த பெண்,
அதைத் தின்று,
கணவனுக்கும் கொடுத்து
தின்னச் சொன்னாள்.
பாம்பின் திட்டம்
பலித்து விட்டது.
முதல் நம்பிக்கைத் துரோகம்,
முதல் வாக்கு மீறல்,
முதல்
மனித சிந்தனை அங்கே
நடந்து முடிந்தது.
அப்போது
வெட்கம் அவர்களை
வட்டமிட்டது.
முதன் முதலாய்
நிர்வாணம் என்ன என்பது
நிர்ணயமானது.
இலைகளை அடுக்கி
ஆடை உடுத்தினர்.
ஆண்டவர் வரும்
ஓசை கேட்டதும்
மரங்களின் முதுகில்
மறைந்தனர்.
ஆண்டவர்,
மனிதனை கூப்பிட்டு
‘நீ எங்கே இருக்கிறாய் ?’
என்று கேட்க,
எனக்கு
கூச்சமாய் இருக்கிறது.
நான்
வெட்கத்தின் வெளிச்சத்தில்
மறைவாய் இருக்கிறேன்
என்றான்.
தன்
கட்டளையின் கதவுகள்
உடைக்கப் பட்டதை
கடவுள் அறிந்து சினந்தார்.
நான் விலக்கியதை
நீ புசித்தாயா ?
யார் உனக்கு
அந்த சிந்தனை தந்தது ?
கடவுள் கர்ஜித்தார்.
நீர் தந்த பெண்
என்னை
உண்ணச் செய்தாள்.
பெண்ணோ,
ஆண்டவரே
பாம்பு என்னை
பாடாய்ப் படுத்திற்று என்றாள்.
குற்றத்தை
ஏற்றுக் கொள்ளாமல்
பிறர் தோளில் திணிக்கும்
ஓர்
மன நிலை
ஆதாம் காலத்திலேயே
அரங்கேறிவிட்டது.
( …. )